மன்னார் தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம் பெற்று வரும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை மற்றும் சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு ஆட்கடத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்தும், குறித்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாலை பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடலில் வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி கொமாண்டர் குமார , மீனவர் சங்க பிரதிநிதிகள், அரச , தனியார் நிறுவன அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் தொடர்பில் கடற்படை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் ஆட்கடத்தல் தொடர்பாகவும் பல விடயங்கள் மீனவர்களுக்கு தெரியப்படுத்த பட்டிருந்தது.
மேலும் மக்கள் மற்றும் மீனவர்கள் முன் வைத்த பிரச்சினைகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

