
தற்போது ஏற்பட்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதை அடுத்து பல நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து வான் கதவுகள் திறக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று காலை 8.30 மணியுடனான 24 மணித்தியாளங்களில் ஆகக்கூடிய மழை வீழ்ச்சி பாதுக்கை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இங்கு 157 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, பல நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இராஜாங்கனை மற்றும் தெதுறு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர்த்தேக்கங்களை சூழவுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் 4 அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளரான பொறியியலாளர் டி. அபேசிறிவர்த்தன தெரிவித்தார்.
அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளது. தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலும் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.