இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் தற்போதைக்கு கிடைக்காது – ரணில் தெரிவிப்பு

நிதி சவால்களை கையாள்வதில் திறமையின்மை மூலம் தற்போதைய அரசாங்கம் நாட்டை ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளுவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான நிலைமை தமது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் இடம்பெறவில்லை. அத்துடன் தமது அரசாங்க காலத்தில் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்கவில்லை. மக்கள் வீதிக்கு வருவதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. எனினும், நாட்டில் உள்ள கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் திறமையின்மையால் இவை அனைத்தும் இடம்பெறுவதாக முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு வரை, பிரதமராக இருந்த போது நாட்டின் பொருளாதாரம் மூலதன ஆரோக்கியமான நிலையில் இருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கத்தின் திறமையின்மை மக்களை வீதிக்கு இறக்கியுள்ளதாகவும் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

மோசமான பொருளாதார நிலைமை அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. இந்தநிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை அணுகினாலும் அர்த்தமுள்ள நிவாரணம் கிடைக்க நீண்ட காலம் எடுக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச உதவிகளை செய்துள்ளது. அத்துடன் புதுடில்லி இன்னும் நிதி அல்லாத வழிகளில் உதவி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த அரசாங்கத்தின் கீழ் புதிய சீன முதலீடு எதுவும் நாட்டுக்கு வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *