
லாகூர், ஏப் 11
பாகிஸ்தானில் தொடர்ந்து நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அந்நாட்டில், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்ட தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் பகுதியில் 19 இடங்களில் பயங்கரவாத ஒழிப்பு துறை இன்று அதிரடியாக தேடுதல் வேட்டை நடத்தியது. இதில், பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்து வந்த அவர்களிடம் இருந்து, டெட்டனேட்டர்கள், வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், பணம், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன், தடை செய்யப்பட்ட டேயீஷ் பயங்கரவாத இயக்க உறுப்பினர்கள் 2 பேரை பயங்கரவாத ஒழிப்பு துறை கைது செய்திருந்தது. அவர்கள் இம்ரான் ஹைதர் மற்றும் ரியாஸ் அகமது என பின்னர் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், ஆயுதங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இலக்கியங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய பகுதிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.