
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கொட்டும் மழையிலும் இன்று 3 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணிமுதல் கொழும்பு – காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், நேற்று கொட்டும் மழைக்கு மத்தியில் இரவோடு இரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்தது.
இளைஞர், யுவதிகளால் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தொடர் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அத்தோடு, நலன்விரும்பிகளும் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி, கூடாரங்கள், படுக்கைகள் போன்ற பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடாரங்கள், தற்காலிக மலசலகூட வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.