கோட்டாவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என வாசுதேவ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தீர்மானம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு செல்ல வேண்டாம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு அவர்கள் ஆலோசனை வழங்கியதாக வாசுதேவ  நாணயக்கார ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த நேரத்தில் பொருத்தமானதாக இருக்காது என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாறாக, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வலியுறுத்துவோம் என நாணயக்கார தெரிவித்தார்.

ஏற்கனவே ஜனாதிபதியுடனும் எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரேரணைகள் ஒன்றை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய நிறைவேற்று சபையை ஸ்தாபித்தல், கடன் கால அவகாசம் கோருதல், எந்த சலுகையையும் பெறாத அமைச்சரவையை அமைத்தல் மற்றும் 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் ஆகிய திட்டங்கள் அடங்குவதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *