
இலங்கையில் ஊழல் ஆட்சிக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் தாயகத்தை காப்பாற்ற கோரி தாங்கள் வசிக்கும் நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், பிரித்தானியாவின் ஹென்லி பிரதேசத்தில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று, இன்றைய தினம் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தற்போதைய இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக இராஜினாமா செய்து, நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை, நேற்று அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரிலும், ஜப்பான் – டோக்கியோ மற்றும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, எதிர்ப்பு பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
அதேசமயம் கடந்த வாரம், ஸ்கொட்லாந்தின் பேர்த் மற்றும் டண்டி மற்றும் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிலும் இலங்கையர்கள் தங்கள் தாயகத்தைப் பாதுகாக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.