
ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் பதவியில் இருக்க தார்மீக உரிமையில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருப்பது நாட்டை மேலும் அதளபாதாளத்திற்குள் கொண்டு செல்லும். தவறான பொருளாதார தீர்மானங்கள் காரணமாகவே இந்த பொருளாதார நெருக்கடி உருவாகியது என்பது தெளிவானது.
இதனால், கோட்டாபய ராஜபக்ச உட்பட அவரது அணியினருக்கு தொடர்ந்தும் பதவியில் இருக்க தார்மீக உரிமை கிடையாது. இதன் காரணமாகவே நாட்டு மக்கள் வீதிக்கு வந்து கோட்டா கோ ஹோம் என்று கூறுகின்றனர்.
இரவு, பகல் மழையில் நனைந்து, நாட்டு மக்கள், இளம் தலைமுறையினர் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் சென்று. இரண்டு மூன்று நாட்களாக அங்கு தங்கி இருந்து ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்?. கோட்டா கோ ஹோம் என்று கூறுகின்றனர்.
கோட்டாபய தொடர்ந்தும் பதவியில் இருந்தால், நாடு மேலும் அதளபாதாளத்திற்கு செல்லுமே அன்றி மீளாது என்பது உண்மை என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உணவு பண வீக்கம் 130 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது எனவும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.