கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை; இதுவரை 68 பேர் சிக்கினர் !!

அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பாக நாடாளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களிடம் இருந்து 8025 லீற்றர் பெற்றோல், 726 லீற்றர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகப்படியான எரிபொருளை கொள்வனவு செய்து வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்பதன் மூலம் பலர் சட்டவிரோத வியாபாரங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கான்கள் மற்றும் பீப்பாய்களில் அதிகப்படியான எரிபொருளை கொள்முதல் செய்து, பின்னர் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த மோசடி, வாகனங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் நிற்கும் பல நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருளின் தட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான மின்வெட்டு என்பன இவ்வாறான மோசடிகளில் சிலர் ஈடுபடுவதற்கு பங்களித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சட்டவிரோத எரிபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக நேற்று திடீர் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களை ஏமாற்றும் இவ்வாறான நபர்களை கைது செய்ய நாடளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *