பிபில காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் விதிகளை மீறி கலன்களில் எரிபொருளை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அதன்போது, எரிபொருள் வரிசையில் நின்ற நபர் ஒருவர் சம்பவத்தை கைப்பேசியின் ஒளிப்பதிவு செய்ததுடன், நாட்டின் சாமானிய மக்களுக்கு தாக்கம் செலுத்தும் சட்டங்கள் மற்றும் விதிகள் பொலிஸாருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதா என பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வினவியுள்ளார்.
அதற்கு பொலிஸ் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியை இயக்குவதற்கு குறித்த டீசல் கொண்டுசெல்லப்படுவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி பதிலளித்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் விநியோகிப்பதனை இடைநிறுத்துமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று உத்தரவு பிறப்பித்து.
எனினும், இந்த உத்தரவுகள் இருந்தபோதிலும், நாட்டின் பல பகுதிகளில் கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு இன்னமும் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்படுகின்றமை அவதானிக்கப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கலன்களுக்கான பெற்றோல், டீசல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்டிய பகுதிகளில் அதிகளவான உந்துருளிகள் சூழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுவரை காலம் சிறு போத்தல்களில் அல்லது கலன்கள் எரிபொருளை பெற்றுச்சென்று உந்துருளி ஓட்டிகள் தமது வாகனங்களுக்கு நிரப்பியிருந்தன.
இந்நிலையில், மேற்படி தடை விதிப்பையடுத்து, தமது உந்துருளிகளை எரிபொருள் நிலையங்களுக்கு அவர்கள் செலுத்திவந்தமையினால் இவ்வாறு உந்துருளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

