
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பசில் ராஜபக்ச ஒரு புதிய உடன்பாட்டினை செய்துள்ளார். அதன் போக்கு இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவின் குடும்பமானது ஆட்சியை கைப்பற்றி வைத்திருக்கும் போது தமது வம்சத்தினருக்கே அமைச்சு பதவிகளை வழங்கினர். இலங்கையின் மொத்த பட்ஜெட்டில் 75 சதவீதமானது ராஜபக்சக்கள் வைத்திருந்த அமைச்சுக்களின் கீழேயே காணப்பட்டது.
எனவே கட்சியில் இருந்தவர்களும் அதிருப்தியான மனநிலையில் காணப்பட்டுள்ளனர். காரணம் அவர்களுக்கும் தேவையுள்ளது. இதன் காரணமாக அரசிற்கு எதிராக கிளம்பியுள்ளனர்.
அதனை போலவே பௌத்த இனவாதத்திற்கு தலைமை தாங்குபவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமக்கு ஆபத்து என முஸ்லிம் மக்களும் அச்சத்தில் இருந்தனர். இதன் காரணமாகவே முஸ்லிம்களும் அரசாங்கத்தை எதிர்க்கின்றனர்.
மேலும் தமிழ் மக்களை பொருத்தவரையில், முள்ளிவாய்கால் அழிவிற்கு காரணமானவர்கள் என்ற மன வடுக்களும் உள்ளது. இப்படி எல்லாவற்றினையும் சேர்த்து பார்த்தால் உள் தரப்பிலேயே ராஜபக்ச அரசு கடும் எதிர்ப்பினை சம்பாதித்துள்ளது. இதுவே தற்போதைய போராட்டத்திற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.