
கொழும்பு, ஏப் 13
அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக இலங்கையினால் கோரப்பட்டிருந்த, 10 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கியிடம் இருந்து பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்தியாவில் இருந்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நாணயக் கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிதியுதவி அல்லது மருந்துகளைப் பெறுவதற்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வெளிநாடுகளிடமும் வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு பணத்தை நன்கொடையாக வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏற்கனவே சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லையென உத்தியோகபூர்வ ஆதாரத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கை, இந்த விடயங்களை பரிசீலித்து திருத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.