வட மாகாண ஆசிரியர்களை தென்பகுதிக்கு நியமிப்பதன் நோக்கம் என்ன? இனவாதம் என்கிறது ஆசிரியர் சங்கம்

கல்வியியற் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை. இது திட்டமிட்ட செயற்பாடு. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கைக்காக போராடும் நிலையில் இதனை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னிப் பிரதேச பாடசாலைகளில் பெருமளவான ஆசிரிய பற்றாக்குறை உள்ளது. அங்கு கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்து, அவர்களில் பலருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இன்னும் வன்னிப்பிரதேசத்தில் ஆசிரிய பற்றாக்குறை அதிகரித்த நிலையில், வடக்கு மாகாணத்தை சொந்த வாழ்விடமாக உள்ள ஆசிரியர்களை அவர்கள் அறியாத தென்பகுதி ஊர்களுக்கு நியமிப்பதன் நோக்கம் என்ன? இது ஒரு இனவாத அல்லது பழி தீர்க்கும் கருமமாகவே பார்க்கிறோம்.

தயவு செய்து இப்போதுள்ள நாட்டுச் சூழ்நிலையில் அவர்களை அவர்களது சொந்த மாகாணத்தில் கடமையாற்ற அனுமதியுங்கள்.இங்குள்ள வெற்றிடத்தை நிரப்புங்கள்.

இதுபற்றி வடக்கு மாகாணம் சார்ந்த அரசியல் தலைவர்கள் சுட்டிக் கதைக்க வேண்டும்.
என சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *