
இலங்கை மற்றும் இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் துணைத் தூதுவர் அனுப்பி வைத்துள்ள புது வருட வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டியவை, அத்துடன் பண்டிகை நாட்களானவை ஒற்றுமையை வலியுறுத்தும் நாட்கள்.
குறிப்பாக இந்த கடினமான காலங்களில், பண்டிகை நாட்கள் சமூக ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துகிறது.
ஒரு நாட்டின் மக்கள் சமூகம் மட்டுமல்ல, பிராந்தியத்திலுள்ள அயல்நாடுகள் – சவால்களைச் சமாளிக்க உதவுகிறது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் தனது சமீபத்திய கொழும்பு விஜயத்தின் போது குறிப்பிட்டது போல், இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” என்ற கொள்கையை செயல்படுத்தி, இலங்கை மற்றும் இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்.
2022 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 36,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 11,000 மெட்ரிக் தொன் அரிசி இந்தியாவால் வழங்கப்படுவதால் இலங்கையில் தட்டுப்பாடு பெருமளவில் குறைவடைந்துள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் உட்பட பிற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இலங்கைக்கு ஆதரவாக இந்திய அரசு மட்டும் அல்ல, இந்திய மக்களும் இலங்கைக்கு ஆதரவாக 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இலங்கையர்கள் மீது தங்கள் கரிசனையை வெளிப்படுத்தியிருப்பதை நீங்கள் ஊடகங்களில் படித்திருப்பீர்கள்.
இது வெறும் அனுதாபத்துடன் நின்றுவிடாமல், பணம் மற்றும் நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்கான தனியார் ஏற்பாடுகள் மூலம் பயனுள்ள செயலாக மாற்றப்பட்டுள்ளது.
வடமாகாண மீனவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக மார்ச் மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, வட மாகாணம் மற்றும் அதன் மக்கள் மீதான இந்தியாவின் கவனத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதே உத்வேகத்துடன், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் உள்ள நாங்கள் குறுகிய காலத்தில் பொருளாதார சவால்களைச் சமாளிப்பதற்கும், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு ஆதரவளிப்பதற்கும் பல்வேறு வழிகளைக் கண்டறிய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
இந்த ஒத்துழைப்பு மற்றும் தோழமை உணர்வு வலுவாக வளரட்டும், மேலும் புதிய ஆண்டில் சிரமங்களை ஒன்றாகக் கடக்க நாம் இலங்கை மக்களுடன் கைகோர்க்கின்றோம் என்றுள்ளது.