
‘கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது போல் மக்கள் கலங்கி நிற்கின்ற நிலையில், மனநிறைவோடு மகிழ்ச்சியோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நாளை பிறக்கவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அனுப்பியுள்ள வாழ்த்து அறிக்கையில்,
ஆண்டு தோறும் வழமை போலும் சித்திரைப் புத்தாண்டில் வாழ்த்துப் பகிர்வதை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
தெய்வநம்பிக்கை கொண்ட மக்கள் புத்தாண்டு பிறக்கிற போது புதுநம்பிக்கையோடு, நம்பிக்கை கொண்ட தெய்வத்தை நினைத்து, மருத்துநீர் வைத்து நீராடி புத்தாடையுடுத்தி சித்திரைப்புத்தாண்டைக் கொண்டாடுவது நமது பாரம்பரியம்.
ஆனால் இலங்கையில் நல்ஆட்சியில்லா நாடாக எதுவுமில்லை என்ற ஏக்கமும் அன்றாடம் போராட்டங்கள் மலிந்து பசி பட்டினியோடு உயிருக்குப் போராடிக் கொண்டு ‘கோத்தா’வெளியேறு என்ற கூக்குரலும், கொந்தளிப்புமாய் அல்லலுறும் அவலமும் எதிர்காலமும் இல்லா மக்களாய் தெருவெல்லாம் போராட்டங்கள் நிறைந்து விட்ட நிலையில் மனநிறைவோடு மகிழ்ச்சியோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை.
இலங்கை இன்றுள்ள நிலை ‘கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது போல் மக்கள் கலங்கி நிற்கின்றனர்.
கடனைச் செலுத்தவும் இயலாநிலை இந்நாட்டுக்கு ஏற்பட்டு விட்டது.
இந்நிலை இலங்கையில் இனவாத பௌத்தமதவாத பெரும்பான்மைத்துவ, அடிப்படை வாத அரசியலை வெறுக்கும் எதிர்க்கும் உணர்வலைகளையும் தோற்றுவித்திருப்பதை அவதானிக்கலாம்.
பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல் இனமத அரசியல் அடிப்படைவாத ஆட்சி நிலைப்பாடுகளையும் மாற்றி சம ஜனநாயக அரசியல் மனித உரிமை மக்கள் சமநீதியையும் ஆட்சிமுறையையும் நிலைநாட்டவல்லதுமாகும்.
ஆனால் இதற்குப் பதிலாக இராணுவ ஆட்சி மூலம் எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.
1956 ஆனி 5ம் திகதி அன்று சிங்களத்துடன் தமிழ்மொழிக்குச் தமிழர் சமஉரிமை கேட்டுப் போராடிய காலிமுகத்திடலில் இன்று ‘அரசே வெளியேறு, கோத்தாவே வீட்டுக்குப் போ’ என்று தென்னிலங்கைப் போராட்டம் தொடர்கிறது.
இந்தப்போராட்டத்துக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்.
இருந்தாலும் மனிதகுல நாகரிகம், மக்களின் பண்பாடு கொண்டு சித்திரைப் புத்தாண்டில் புதுநம்பிக்கையோடும், புத்தெழுச்சியோடும் தமிழர் தம் தேசத்தில் விடுதலை பெற்ற மக்களாய் எழுவோம் வாழ்வோம் எனத் திடசங்கற்பம் கொள்வோம்.
அந்த நம்பிக்கையோடு சித்திரைப் புத்தாண்டில் எம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றோம். என்றுள்ளது.