
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு – காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் தமிழ் மக்களும் பங்கெடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட காயம் பெரிது எனத் தெரிவித்துள்ள மனோ கணேசன், அதனாலேயே போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது எனவும் விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் நடத்தப்படும் போராட்டம் 5ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
ராஜபக்சர்களுக்கு மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை காட்சிப்படுத்தியவாறு, கூடாரம் அமைத்து இரவு பகலாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்புக் குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது குறிப்பில்,
காலிமுகத்திடல் புரட்சி தான், சமகாலத்தில் இந்தப் பேரினவாத கட்டமைப்பை மாற்றக் கிடைத்துள்ள மிகப் பெரும் சந்தர்ப்பம்.
ஆகவே படிப்படியாக தமிழர்கள் இந்தப் புரட்சியில் பங்கேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரினவாத கட்டமைப்பின் பிரதான அங்கம் ராஜபக்ச குடும்பம் எனத் தெரிவித்துள்ள அவர், முழு பேரினவாத கட்டமைப்பும் ராஜபக்சர்கள் மாத்திரமல்ல என்பதை புதிய சிங்கள தலைமுறை உணர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கட்டமைப்பில் உள்ள தம்மால் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்க முடியாது.
எனினும், தமிழ் மக்கள் இந்த “ காலிமுகத்திடல் புரட்சி”யில் படிப்படியாக பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.