
புத்தளம் மாவட்டத்தில் டீசலுக்கும், பெற்றோலுக்கும் மீண்டும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுவ, ஆனவிழுந்தாவ, புளிச்சாக்குளம், முந்தல், மதுரங்குளி, கற்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறு “டீசல் இல்லை”, ” பெற்றோல் இல்லை” எனும் வாசகங்களே தொங்கவிடப்பட்டுள்ளன.
ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இரவு, பகலாக இழுத்து மூடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
எனினும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக டீசல் பெற்றுக்கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் வீதியோரம் இரவு , பகலாக தரித்து நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை, நேற்று (12) முதல் கேன்கள் மற்றும் பெரல்களுக்கு டீசல் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள நிலையில், மதுரங்குளி பகுதியில் விவசாயிகளுக்கு மாத்திரம் கேன்களில் டீசல் வழங்கப்படுகிறது.
விவசாயி, இறால் வளர்ப்பாளர்கள் ஆகியோருக்கு நாளொன்றுக்கு தேவையான டீசல் கேன்களில் வழங்கப்படுவதுடன், குறித்த விவசாயி, மற்றும் இறால் வளர்ப்பாளர்கள் வசிக்கும் கிராம சேவகரும், பிரதேச செயலாளரும் அதனை உறுதிப்படுத்திய துண்டை கொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே டீசல் கேன்களில் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒக்சன் 95 பெற்றோல் மாத்திரமே விநியோகிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.