ஒன்றிணைந்து செயற்பட்டு எமது அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வோம்! – சபாநாயகர்

ஒரே இலங்கையர் என்ற இனமாக ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே எமக்கு முன்னால் உள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள முடியும் என சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையர்களாகிய சிங்கள, தமிழர்களாகிய நம் அனைவருக்கும் தற்போது பிறந்திருப்பது வருடத்தின் மகிமையான பண்டிகையான சிங்கள – தமிழ் புத்தாண்டாகும்.

2,500 வருடங்களுக்கு மேலான நீண்ட வரலாற்று காலத்தில் நாம் இந்த மாபெரும் கலாசார விழாவை எமது தேசிய பாரம்பரியமாகக் கருதி அதனை எதிர்கால சந்ததியினரும் உணர்ந்துகொள்ளும் வகையில் உயர்வாகக் கொண்டாடி வருகின்றோம்.

கடந்த காலங்களில் நாம் முகங்கொடுத்த சிக்கலான, சவால் மிக்க காலப் பகுதியிலும் இவ்வாறான நிகழ்வைக் கொண்டாட நாம் தவறவில்லை. எமது வருங்கால சந்ததியினருக்கு சொந்த காலாசாரத்தின் பெறுமதியை அறிமுகப்படுத்த இதுபோன்ற பொருத்தமான சந்தர்ப்பம் வேறேதும் இல்லை என்பதாலாகும்.

தற்பொழுது நாம் மாத்திரமன்றி உலக மக்கள் அனைவரும் கடினமான பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்டுள்ளோம். இருந்தபோதும் நவீன தலைமுறையினருக்குப் பழமையான, தேசிய கலாசாரத்தின் அடிப்படைகளை கடத்துவதற்குக் காணப்படும் இதுபோன்ற தனித்துவமான சந்தர்ப்பங்களைத் தவறவிடக்கூடாது என நான் கருதுகின்றேன்.

எனினும், தவிர்க்கமுடியாத பல்வேறு காரணங்களால் எம்மால் கடந்த சில வருடங்களில் புத்தாண்டைக் கொண்டாட முடியாமல் போனது.

ஒவ்வொரு சிங்கள – தமிழ் புத்தாண்டிலும் தனது பிள்ளைகள் அனைவரினதும் வயிற்றையும், இதயத்தையும் மகிழ்ச்சியால் நிரப்ப வேண்டும் என்பதே ஒரு தாயின் எதிர்பார்ப்பாகும்.

எமது பெற்றோர் மற்றும் வயது முதிர்ந்தோர் இந்தப் புத்தாண்டின் சுபநேரத்துக்கு அமைய வீட்டில் கூடும் சொந்தக் குடும்பத்தினரை அன்புடனும், அன்பான இதயத்துடன் கூடிய கடினமான வாழ்க்கைச் சூழலில் உள்ள அயலவர்கள், தூரத்தில் உள்ள உறவினர்களை சடங்குகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பார்கள் என உண்மையில் நம்புகின்றேன். நீங்கள் அனைவரும் இணைந்து எதிர்காலத்துக்கு நிழல் தரக்கூடிய பெறுமதிமிக்க மரக்கன்று ஒன்றை நாட்ட முடியும்.

அதிக செலவு இன்றி பிள்ளைகளுக்குப் புத்தகங்களைப் பரிசளிக்க முடியும். இது எதுவும் இல்லாவிட்டாலும் எதிர்கால தலைமுறையினருக்கு அறிவுரை மற்றும் முன்மாதிரியை வழங்குவதற்கான காலம் இது என்பதை மறந்துவிடக்கூடாது. எமக்கு அவசியமில்லாத மின் விளக்குகளை அணைத்து சிறுவர்களுக்கு முன்மாதிரியை எடுத்துக் காட்டலாம் என்று நினைக்கின்றேன்.

எவ்வாறாயினும், ஒரே இலங்கையர் என்ற இனமாக ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே எமக்கு முன்னால் உள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள முடியும். சிங்கள இனத்தவர்களும், தமிழ் இனத்தவர்களும் தமது உயிரை இரண்டாவதாக வைத்து தமது மத மற்றும் தத்துவங்களை கடைப்பிடிக்கின்ற பிரிவினர்.

சிங்களவர்களாகிய நாம் சகல வேலைகளையும் கைவிட்டு, இஷ்டமான தெய்வத்தை மனதில் நினைத்து, புன்னிய காலத்தில் விகாரைக்குச் சென்று கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம். எமது சகோதர தமிழ் இனத்தவர்கள் கோவில்களுக்குச் சென்று கடவுளர்களுக்கு விசேட பூஜைகளைச் செய்து புத்தாண்டில் அமைதி, சமாதானத்தை வேண்டிக்கொள்வார்கள்.

அது மாத்திரமன்றி வீடுகளில் தாய்மார் பால் பொங்க வைத்து வீட்டுக்கும், நாட்டுக்கும், ஊருக்கும் சுபிட்சத்தை வேண்டுவது ஒரே சந்தர்ப்பத்திலாகும்.

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பல சிரமங்களை ஒருங்கே முறியடித்து, முதுபெரும் கவிஞர் மகாகமசேகர கூறியதைப் போல, எமது தன்னலத்தில் உருவான பூமியைப் பிளவுபடுத்திய சுவர்கள் மற்றும் முள்வேலிகள் என அனைத்து பிரிவினைகளும் மறைந்து முழு உலகமும் ஒன்றிணைந்து எமது இலங்கையர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.- என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *