டுவிட்டர் பங்குகளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி எலான் மஸ்க் மீது வழக்கு

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் மீது விமர்சனங்களை முன் வைத்து அதற்கு மாற்றாக புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கப்போவதாக கூறி வந்த உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், திடீர் திருப்பமாக டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை தான் வாங்கியதாக கடந்த 4-ந்தேதி எலான் மஸ்க் அறிவித்தார். இதையடுத்து அவர் டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி டுவிட்டர் நிறுவன பங்குதாரர் ஒருவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகர கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதிகாரப்பூர்வ காலக்கெடுவிற்குள் நிறுவனத்தில் தனது பங்குகளை வெளியிடாததன் மூலம் குறைந்த விலையில் பங்குகளை வாங்கியதாகவும், அதன் மூலம் சக பங்குதாரர்களுக்கு எலான் மஸ்க் தீங்கு விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *