
டோக்கியோ, ஏப் 14
அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு இணங்க மறுக்கும் வடகொரியா, தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிரவைத்து வருகிறது. அந்த வகையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது.
அதன் தொடர்ச்சியாக, இந்த வாரத்தில் வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்த பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கடற்படைகள் கொரிய தீபகற்பத்தில் நேற்று கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன.
இந்த பயிற்சிக்கு அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல் தலைமை தாங்கியது. 2017-ம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் கொரிய தீபகற்பத்தில் பயிற்சியை நடத்தியது இதுவே முதல் முறையாகும். கொரியா தீபகற்பத்தில் ஏற்கனவே பதற்றம் நீடித்து வரும் சூழலில், அங்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது வடகெரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் எனவும், இதற்கு வடகொரியா கடுமையாக எதிர்வினையாற்றும் எனவும் சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.