
கொழும்பு, ஏப் 14
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகளவு காணப்படும் நிலையில் களவுகள் அதிகம் இடம்பெறுவதாக பொலிஸார் அறிவித்திருந்தனர். தற்பொழுது போலி நாணயத்தாள்கள் சமூகத்தில் அதிகம் புழக்கத்தில் உள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கம்பஹா – தாரலுவ பகுதியில், 29 வயது நபரிடமிருந்து, 1,000 ரூபா நாணயத் தாள்கள் 34 உம், சில 5,000 ரூபா நாணயத்தாள்களும் நேற்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், அவர் போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்திய, கணினி உள்ளிட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போலி நாணயத்தாள்கள் குறித்து, பொதுமக்களும், வர்த்தகர்களும் அவதானத்துடன் இருப்பதுடன், அருகில் உள்ள காவல்துறை நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும் காவல்துறை பேச்சாளர் கோரியுள்ளார்.