கடனால் சூழ்ந்துள்ள இலங்கை மேலும் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது! ரோஷி

எதிர்காலத்தில் இலங்கை 7 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்தவேண்டிய காரணத்தால் எமது நாடு மேலும் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என கொழும்பு மாநகரசபை மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாணவேண்டியதன் அவசியம் குறித்து அவர் விடுத்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதன் மூலமே நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.

எதிர்க்கட்சியினர் அனைவரும் பேதங்களை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு அணிதிறண்டு தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பது இரண்டு கட்சிகள் அல்ல. ஒரே குடும்பத்தில் இருந்து பிரிந்துசென்ற சகோதரர்கள் உடைய அரசியல் சக்தியாகும் என்பதை அந்த கட்சிகளின் தலைவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

தூரநோக்கற்ற அரசியல்வாதிகள் நாட்டின் தற்காலத்தை மாத்திரமல்லாது பிறக்காத வருங்கால சந்ததியையும் அவல நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன.

மேலும் உங்களை மக்கள் பிரதிநிதிகளாக நியமித்த மக்களை பட்டினியால் மரணிப்பதற்கு இடமளிப்பதா? இல்லாவிட்டால் அவர்களுக்காக கூட்டுப்பொறுப்புடன் அர்ப்பணிப்பதா என்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் எடுக்கவேண்டும்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *