
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலர் எவ்வாறு விடுவிக்கப்பட்டனர் என கத்தோலிக்க திருச்சபை இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
கொழும்பு பேராயரின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இந்த கேள்வியை எழுப்பினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன அண்மையில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் தெரிவித்திருந்தார்.
நாட்டில் தற்போது நிலவும் கொந்தளிப்பின் மத்தியில் விளக்கமளிக்கும் கூட்டம் ஏன் நடத்தப்பட்டது?
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசியல் தலைவர்களை பாதுகாக்க பாதுகாப்பு செயலாளருக்கு உள்ள தார்மீக உரிமை என்ன? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 81 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.