ஆறாவது நாளாகவும் இன்றும் (14) கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறும் அரசாங்கத்துக்கு எதிரான தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக திருகோணமலையில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த சத்தியாக்கிரக போராட்டம் நேற்று (13) முதல் இன்று (14) மாலை வரை திருகோணமலை 4ஆம் கட்டை சந்தியில் நடாத்துவதற்கு தீர்மானித்து இடம் பெற்றது.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டம் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களுக்கு ஊக்கத்தினை வழங்குமுகமாக, திருகோணமலையின் முக்கிய மதகுருமார்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்கேற்புடன் இடம் பெற்றன.
குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்ட பிக்குகளில் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மக்கள் இவ்வாறு வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றமை நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் பெரிதும் எதிர்பார்ப்புடன் எனவும் இவ்வாறு எவ்வளவு கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து குறித்த அரசாங்கம் மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்காமல் அவர்களது ஆட்சியை,பதவியை தக்க வைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவது பெரிதும் கவலைக்குரிய விடயம் என இதன்போது சுட்டிக்காட்டினார்
மேலும் நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளதாக நேற்றைய தினம் நிதியமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் நாட்டின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கு பெரிதும் கேள்விக்குறியாக அமையும் எனவும் இவ்வாறு மக்களின் ஆணைப்படி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் மீண்டும் மக்கள் வீதிக்கு இறங்கி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும்போது நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சி செய்வதற்கான தகுதி இல்லாத பட்சத்தில் தமது பதவிகளை துறந்து மக்கள் ஆணைக்கு அடிபணிய வேண்டும் எனவும் கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் அமைப்பாளர் சட்டத்தரணி அருன் ஹேமச்சந்திர இதன்போது சுட்டிக்காட்டினார்
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பொது அமைப்புகள் கலந்து கொண்டதுடன் தீப்பந்தம் ஏந்தியவாறு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


