
மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இப்போது கோபத்திற்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் இது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டிற்கான அவர்களின் திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாகவும் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
“எங்களிடம் உள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, நாங்கள் மக்களுக்குத் தெரிவிக்கவில்லை – நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
The Print ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் நாமல், இலங்கையில் முறையான மாற்றத்தின் அவசியம் குறித்து பேசினார்.
அவரைப் பொறுத்தவரை, முற்போக்கான தலைமையானது காலாவதியான நிர்வாக அமைப்பால் பின்தங்கியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் தேவையான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும் – ஜனாதிபதியின் தற்போதைய மௌனம் நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்ட நாமல், “ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களைப் பற்றி அவர்களிடம் கூற வேண்டும்” என்றார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சரும் அவரது மற்றொரு சித்தப்பாவுமான பசில் ராஜபக்ஷ, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித்து அதிகம் பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என்பதை தாம் புரிந்து கொண்டதாகவும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கான அவர்களின் உரிமையை ஆதரிப்பதாகவும் நாமல் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அத்தகைய கோபம் பயனற்றது மற்றும் மேலும் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.
குறிப்பாக எதிர்ப்புக்கள் சுற்றுலாப் பயணிகளை விலக்கி வைக்கக்கூடும், இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றார்.