
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது என தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என நாடளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலை தொடர்பில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது என 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலே தமிழ் சொல்லி விட்டனர். 2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் ஜோசித்து இருந்தால் ராஜபக்சாக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். இன்று தான் சிங்கள மக்கள் அதை சொல்கின்றனர். ஆகவே எமக்கு சிரிப்பாக இருக்கின்றது.
யார் இந்த போராட்டக்காரர்கள் என்று பார்த்தால் 19, 20 வயது உடைய இளைஞர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜபக்சாக்கள் இங்கே இடம்பெற்ற போரை காட்டி கடன் வாங்கினார்கள். இப்போதும் நாட்டை காட்டி கடன் வாங்கி இருக்கிறார்கள். நாம் அன்று அல்லல்பட்டோம் . எங்களுக்காக ஒருவர் கூட அன்று பேசவில்லை. ஆனால் இப்போது போராட்டத்தில் உள்ள இளைஞர்கள் இதை உணர்வார்கள்.
நாம் ஒரு தசாப்தமாக மின்சாரம் இல்லாமல், எரிபொருள் இல்லாமல் இருந்தோம். எவ்வளவு துன்பங்களை பார்த்தோம். அன்று எமக்காக யாரும் வரவில்லையே என்று இப்போது தமிழ் மக்கள் சிந்திக்கின்றனர். அதற்காக நாம் அப்படியே இருக்க மாட்டோம். சிங்கள மக்கள் அன்று செய்த தவறை செய்ய மாட்டோம். உள் மனதிலே உறுத்தல் இருந்தாலும், இன்றைய உங்களின் போராட்டத்துக்கு நாம் ஆதரவு கொடுப்போம்.
இதே காலி முகத்திடலில் 66 வருடங்களுக்கு முன்னர் சாத்வீக போராட்டத்தை அன்று மேற்கொண்டோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்றும் நாம் சமத்துவத்துக்காக போராடினோம். ஆகவே உங்களின் போராட்டத்தின் நோக்கத்தை அறிவதற்கு நாம் இப்போது ஆவலாக உள்ளோம்.
தம்பி போனால் அண்ணன் ஆட்சி பீடம் ஏறுவார் என்ற பயம் வேண்டாம். இரண்டு தடவை அவர் ஜனாதிபதியாக இருந்து விட்டார் ஆகவே பாராளுமன்றம் அதை முடிவு செய்யும்.நிலையான அரசு இப்போது அவசியம்.அதற்கு பல முயற்சிகள் நடைபெறுகின்றன. போராட்டக் களத்துக்கு அரசியல் கட்சிகள் வேண்டாம் என்று இளைஞர்கள் கூறியுள்ளனர். ஆகவே வடக்கு கிழக்கிருந்து இளைஞர்கள் அங்கு சென்று ஆதரவு வழங்க வேண்டும். எமது நிலைப்பாட்டை அங்கே தெரிவிக்க வேண்டும். – என்றார்.