தெருநாய் கீறி 3 மாதங்களுக்கு பின் நபர் உயிரிழப்பு

பருத்தித்துறை, ஏப் 15

தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையிலுள்ள சகோதரி வீட்டில் தங்கிருந்த போது அவருக்கு வியாழக்கிழமை இரவு திடீரென நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சைப்பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

அவர் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாது நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகினார் என்று சட்ட மருத்துவ வல்லுநரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் வயது – 35 என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடிக்கு உள்ளாகிய குடும்பத்தலைவர் அதுதொடர்பில் மருத்துவ சிகிச்சை பெறாததால் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளார்.

அத்துடன், 2 மாதங்களுக்கு முன்பு பூனையும் அவருக்கு நகங்களால் கீறியுள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *