
கூட்டாக அமைச்சு பதவிகளில் இருந்து விலகியவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையினை எதிர்வரும் வாரத்திற்குள் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் அரசியல் மட்டத்திலான அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய சகல அமைச்சர்களும் கடந்த 3 ஆம் திகதி அமைச்சு பதவிகளை துறந்தோம்.
நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்கும் நோக்கம் எதிர்தரப்பினருக்கு கிடையாது. தற்போது நெருக்கடியினை தீவிரப்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நிலையான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியுடன் இன்று விசேட பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். பாராளுமன்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தான் தற்போதும் பெரும்பான்மை பலம் உள்ளது.
புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை கிடையாது. பெரும்பாலான உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையை எதிர்வரும் காலத்திற்குள் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம்.- என்றார்.