
கொழும்பு, ஏப் 16
தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக நடைமுறைப்படுத்தப்படும், விசேட பஸ் சேவை, இன்று முதல் மேலும் அதிகரிக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனியார் பஸ்கள், இன்றும், நாளையும் வழமைபோன்று சேவையில் ஈடுபட மாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் தனியார் பஸ்கள் வழமைபோன்று சேவையில் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமைவரை, அலுவலக ரயில்கள் வழமைபோன்று சேவையில் ஈடுபடுமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வறாறிருப்பினும், தூர இடங்களுக்கான ரயில் சேவைகள், வழமையான நேர அட்டவணைக்கு அமைய இடம்பெறும் என்றும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.