ரஷ்ய போரில் 3 ஆயிரம் வீரர்கள் உயிரிழப்பு: உக்ரைன் ஜனாதிபதி வேதனை

கீவ், ஏப் 16

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது 7 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவுடனான இந்த போரில் உக்ரைனிய படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

10 ஆயிரம் பேர் வரை காயமடைந்து உள்ளனர் என உக்ரைனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்து உள்ளார். இந்த போரில் எத்தனை பேர் உயிர் பிழைத்திடுவார்கள் என்று கூறுவது கடினம் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

உக்ரைனிய தலைநகரில் இருந்து ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர், உக்ரைனிய அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றதில், 900க்கும் மேற்பட்ட குடிமக்களின் உடல்கள் பல பகுதிகளில் கிடந்துள்ளன. கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், தெருக்களில் பலர் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

இதனால், பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு, எளிதில் வீழ்த்தி விட்டு சென்றதற்கான அடையாளம் காணப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் போர் கப்பல் ஒன்று கருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட பின்னர், கீவ் நகரின் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், உக்ரைனியர்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. இதேபோன்று, கிழக்கு உக்ரைனில் புதிய தாக்குதல்கள் நடத்த ரஷியா தயாராகி வருகிறது. தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. வடகிழக்கு நகரான கார்கீவில் நடந்த குண்டுவீச்சு தாக்குதலில் குடியிருப்பு பகுதி சேதமடைந்து 7 மாத குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர். 34 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை கவர்னர் ஓலே உறுதிப்படுத்தி உள்ளார்.

இதனால், உக்ரைனில் தொடர்ந்து போர் நீடித்து வருவதுடன் பொதுமக்கள் மற்றும் வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை இருதரப்பிலும் அதிகரிக்க கூடிய சூழல் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *