
நாட்டு மக்கள் சிக்கல் நிலைமைகளை எதிர்கொண்டிருக்கும்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் உணர்வூபூர்வமாக செயற்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பு இன்று ஊடகங்களுக்கு வழங்கிய விசேட காணொளிப் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல் பலம் தொடர்பிலான சிக்கலான நிலைமை ஒன்று ஏற்பட்டிருக்கும் தருவாயில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய கேள்வி எழுந்துள்ளது. ஒரு புறத்தில் பணத்தை வழங்குவதற்கு முயற்சிப்பார்கள் மறுபுறத்தில் பதவிகளை வழங்குவதற்கு முயற்சிப்பார்கள்.
கடந்த 52 நாட்கள் ஆட்சியில் மைத்திரபால சிறிசேனவின் குழுவினர் எனக்கும் அவ்வாறான ஒரு பெறுமதியை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
50 கோடி ரூபாய் பணத்தையும் அதேபோன்று அமைச்சுப் பதவியையும் தருவதற்கு முயற்சித்தார்கள். கடந்த காலங்களை எடுத்துக்கொண்டால் நாட்டுமக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தார்கள்.
விவசாயிகள் உரப்பிரச்சினைக்கு முகங்கொடுத்தார்கள். சிறுவர்கள் பால்மா பக்கெட்டுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். வீடுகளில் எரிவாயு இல்லாத பிரச்சினை காணப்பட்டது. எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எரிவாயு வரிசைகளில் மக்கள் விழுந்து உயிரிழக்கும் நிலைமையும் காணப்பட்டது.
எனினும் இந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் உணர்வுபூர்வமாக செயற்படவில்லை.
சிக்கலான நிலைமைகளின்போது மக்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாக செயற்படாத இந்த தரப்பினர் தற்போதைய இந்த சந்தர்ப்பத்தில் நாடு தொடர்பிலும் நாட்டுமக்கள் தொடர்பிலும் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருப்பார்கள் என்பது தொடர்பில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.