
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
குறிப்பாக நம்பிக்கையில்லாப்பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்துவெளியிட்ட அவர்,
இன்றளவிலே ஊழல்மோசடிகள் நிறைந்த அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்து வருகின்றது. நாட்டின் தேசிய சொத்துக்களையும், வளங்களையும் கொள்ளையடிக்கும் ஓர் குடும்பத்தினால் ஆளப்படும் நாடு எவ்வகையிலும் முன்னேற்றமடையாது.
தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான நெருக்கடிகளுக்கு இந்தக் குடும்ப ஆட்சியே காரணம், அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளிலும் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றேன்.
அதேவேளை நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
குறிப்பாக நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தோற்கடிப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் அதேவேளை, அதனுடன் நிறுத்திவிடாமல் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் போராடிவரும் அனைத்து மக்களின் பெயராலும் அதற்கு உத்தரவாதம் அளிக்கின்றேன்.
ஏனெனில் போராட்டங்களை முன்னெடுத்துவருவோரின் கோரிக்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளை ஒத்தவையாக இருக்கின்றது.
ஆகவே அரசியல் சார்பற்ற வகையில் பொதுமக்களால் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தப் போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மிகமோசமான ஆட்சியை முறியடிப்பதற்கான எமது ஜனநாயகப்போராட்டம் தொடரும்.
நாடளாவிய ரீதியில் அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றார்கள்.
ஆனால் அரசாங்கம் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் தயாராகி வருகின்றது. அதுமாத்திரமன்றி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்திலும் பாரிய மோசடி இடம்பெற்றுவருகின்றது. இவற்றை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரவேண்டும்.- என்றார்.