
காலிமுகத்திடலில் திடீரென நேற்றுக்காலை பெருமளவு பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் போராட்டக்களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை தொடர்பில் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் சில மணி நேரங்களில் அவை அங்கிருந்து அகற்றப்பட்டன.
காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகப் பக்கமாக போராட்டக்காரர்களின் ’கோத்தாகோகம’ அமைந்துள்ளது. அதற்கு எதிர்த்திசையில் துறைமுகநகரம் அமைந்துள்ள பகுதியிலுள்ள பாதையோரத்திலேயே சுமார் 30 க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இது போராட்டக்களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது.
‘எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, பொதுமக்களுக்கு உள்ள சட்டரீதியான உரிமையைத் தடுப்பதற்கு எவரேனும் நடவடிக்கை எடுத்தால், அது குறித்து தீவிர அவதானம் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறான முயற்சிகள், நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும், பொருளாரத்துக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர், தற்போதைய நாள்களில் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அந்த வண்டிகள் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். பின்னர், அவை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.