
காலிமுகத்திடலில் ராஜபக்ச அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள போராட்டக்காரர்களை கலைப்பதற்கு அரச உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இளைஞர்களின் தன்னெழுச்சியால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்று 8ஆவது நாளாகவும் தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தரப்பினரின் ஆதரவுடன், வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன. தன்னார்வலர்களின் உதவியுடன், உணவு மற்றும் போராட்டக்காரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
காலிமுகத்திடலில் உருவாக்கப்பட்டுள்ள ’கோத்தாகோகம’வில் தங்கி நின்று போராட்டங்களை முன்னெடுத்து வரும் இளையோர் அரசிடம் 5 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அத்துடன் அவர்கள் தமது போராட்டங்களை விரிவாக்கி வருகின்றனர். காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதேவேளை ‘கோத்தாகோகம’ கிராமங்களும் முளைத்துள்ளன.
தீவிரமடைந்து வரும் போராட்டத்தை முடக்குவதற்கு அரச உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று நேற்றிரவு செய்தி வெளியிட்டுள்ளது.
‘ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு, மேல் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஜனாதிபதி செயலக பிரதான வாயிலை மறித்து கூடியிருக்கும் போராட்டக்காரர்களையும், கோத்தாகோகமவில் தங்கியுள்ள போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் அவதானம் திரும்பியுள்ளது. அதற்காக கையாள முடியுமான உத்திகள் தொடர்பில் உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்களிடையே குழப்பத்தை உருவாக்கி அதனை மையப்படுத்தி அவர்களைக் கலைப்பது, போராட்டக்காரர்களின் கூடாரங்களுக்குள் போதைப் பொருள்களை வைத்து அதனை மையப்படுத்தி அவர்களைக் கைது செய்வதன் ஊடாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தை கலைப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக விடயங்கள் பகிரப்பட்டு, ஆர்ப்பாட்டத்தை கலைக்க சதி செய்யப்படுவதாக பல்வேறு தரப்புக்களாலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன’ என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.