புத்தளம் – மதுரங்குளி கரிக்கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரங்குளி – கரிக்கட்டை பகுதியில் பயணிகளை இறக்குவதற்காக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன், சொகுசு கார் ஒன்று பின்னால் வந்து மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து நேற்றிரவு மன்னாரை நோக்கிப் பயணம் செய்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் புத்தளம் கரிக்கட்டை பகுதியில் பயணி ஒருவரை இறக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது புத்தளம் நோக்கிப் பயணம் செய்த சொகுசு கார் ஒன்று, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பஸ் மீது பின்னால் வந்து மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சொகுசு காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் குறித்த சொகுசு காரின் முன் பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
அத்துடன், விபத்து சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பஸ்ஸின் சாரதியிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அந்த பஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
