முச்சக்கரவண்டிகளை பந்தாடிய சொகுசு வாகனம்! – வவுனியாவில் பதட்டம்

வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற சொகுசு வாகனம் வீதியால் பயணித்த முச்சக்கரவண்டிகளை பந்தாடிவிட்டு நிறுத்தாமல் சென்றமையால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

ஏ9 வீதியில் யாழ்ப்பாண திசையில் இருந்து வேகமாக வந்த கயஸ்வாகனம் வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர்களை மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றதுடன், வைத்தியசாலைக்கு அண்மையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வந்துகொண்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகளையும் மோதித்தள்ளியது.

தொடர்ச்சியாக நிறுத்தாமல் சென்ற குறித்த வானின் சாரதி இலுப்பையடி பகுதியில் மேலும் ஒரு முச்சக்கர வண்டியினை மோதித்தள்ளியதுடன், நிறுத்தாமல் தப்பிச்சென்றார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகைதந்த போக்குவரத்து பொலிசார் குறித்த வாகனத்தினை துரத்தி சென்றனர். பொலிசாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரும் குறித்த வாகனத்தினை துரத்தி சென்றனர்.

அதிவேகமாக சென்ற வாகனம் அனுராதபுரம் மாவட்டத்தின் ஹொறவப் பொத்தானை பகுதியில் வைத்து பொலிசாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டது. அதன் சாரதி கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்தால் வவுனியா நகரப்பகுதியில் மாத்திரம் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய அசம்பாவிதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.

குறித்த வானின் சாரதி மதுபோதையில் இருந்தாரா அல்லது போதைப்பொருட்கள் எதனையும் கடத்திச்சென்றாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *