தாய்மார்கள், சிறுவர்களின் மரண வீதம் அதிகரிக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

பொது சுகாதார சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை முறையாக வழங்க தவறினால் தொற்று நோய்கள் மற்றும் தாய், சிறுவர்களின் மரண வீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பொது சுகாதார சேவையை முன்னெடுத்து செல்வதற்கு தேவையான வசதிகள் கிடைக்கப்பெறாமையினால் ஏற்படப்போகும் பாதிப்பு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் காலா காலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த பொது சுகாதார சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொது மக்கள் சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்லும் சுகாதார அதிகாரிகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை. சுகாதார அதிகாரிகள் காரியாலயங்களின் வாகனங்களுக்கும் எரிபொருள் இல்லை.

மருந்து பொருட்களை பாதுகாத்து வைக்கும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு தேவையான மின்சாரம் இல்லை. அங்கிருக்கும் ஜெனரேட்டர்களுக்கு தேவையான எரிபொருள் இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் சுகாதார சேவை முன்னெடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் உலகில் சிறந்த சுகாதார சேவையை மேற்கொள்ளும் நாடு என்ற பெயரை தற்போது நாங்கள் இழந்து வருகின்றோம்.

அத்துடன் எதிர்காலத்தில் பாரிய சுகாதார பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. குறிப்பாக தொற்று நோய்கள் அதிகரிக்கலாம், தாய், சிறுவர்களின் மரண வீதம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதுடன் பாடசாலை சிறுவர்களின் மந்தபோசணை வீதம் அதிகரித்து செல்லும் நிலை ஏற்பட்படிருக்கின்றது.

தாய்மாருக்கான சுகாதார சேவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளதால் மீண்டும் தொற்று நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் தற்போது கைவசம் இருக்கும் சுகாதார வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்து, மக்களின் உயிர்களை பாதுகாக்க அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதார அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோன்.

அதேபோன்று பொது மக்கள் சுகாதார தேவையை முன்னெடுப்பதற்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் மேலும் தொற்று நோய்கள் பரவும் நிலை அதிகரிக்கும் தாய், சிறுவர்களின் மரண வீதம் பாரியளவில் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. அதனால் இது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் அவதானம் செலுத்தி மக்களின் உயிர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *