
புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மாத்திரமே பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 3ஆம் திகதி முன்னாள் அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து நாடாளுமன்றம் மற்றும் அத்தியாவசிய அரச சேவைகளை முன்னெடுத்து செல்வதற்காக ஜனாதிபதியினால் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், தினேஸ் குணவர்தன, அலி சப்ரி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகிய நால்வர் மாத்திரம் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக முன்னாள் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தொடர்ச்சியான சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது புதிய அமைச்சரவை உருவாக்கம்ட குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு எவ்வித அமைச்சுப்பொருப்புக்களையும் வழங்க வேண்டாம் என ஆளும் கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக புதிய அமைச்சரவையில் தாம் அமைச்சர் பதவியை வகிக்கப் போவதில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அமைச்சர் பதவியை ஏற்கப்போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அமைச்சரவையில் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் அறிவித்துள்ளார்.
இவ்வாறான சூழலில் இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரமேஸ் பத்திரன, திலும் அமுனுகம, செஹான் சேமசிங்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.