புதிய அமைச்சரவை நியமனத்தில் இழுபறி – எதிர்க்கட்சி பக்கம் அமரப்போவதாக கூறும் மஹிந்த?

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் சுற்று மிகவும் காரசாரமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய முகங்கள் பலரைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான பிரேரணையை இந்தக் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் பலர், ஜனாதிபதியின் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் எதிர்க்கட்சியில் அமரப்போவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், புதிய நியமனங்களை வழங்குவதற்காக, அண்மையில் நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சரவை அமைச்சர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து தற்போதைக்கு விலகத் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறு நடந்தால், தனக்கும் தனது குழுவினருக்கும் எதிர்க்கட்சியில் அமருவதைத் தவிர வேறு வழியில்லையென ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான இறுதி தீர்மானங்களை எடுப்பதற்காக அழைக்கப்பட்ட கலந்துரையாடல் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் புதிய அமைச்சரவை பதவிகளை ஏற்கப்போவதில்லையென தெரிவித்திருந்தனர்.

எனினும் நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்யாது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *