காலியில் நேற்று களேபரம்: அரசின் சதி ஆரம்பமா?

  • ‘கோத்தாகோகம’ கூடாரத்தை அகற்றிய பொலிஸார்
    போராட்டக்கார்களுடன் தர்க்கமும் மோதலும்
    மீண்டும் மிகப்பெரிய கூடாரத்தை அமைத்த போராட்டக்காரர்கள்
  • விசாரணைக்கு உத்தரவிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு

அரசுக்கு எதிரான போராட்டங்களை முறியடிக்க உயர்மட்ட சதியாலோசனை நடத்தப்பட்டதான தகவல் வெளிவந்து 24 மணி நேரத்துக்குள், காலியில் அமைக்கப்பட்டிருந்த ‘கோத்தாகோகம’ கூடாரத்தைப் பொலிஸார் பலவந்தமாக பிடுங்கியெறிந்து அகற்றினர். தடுக்க முனைந்த போராட்டக்காரர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் அவர்களைத் தாக்கி கூடாரத்தை அப்புறப்படுத்தினர்.

ஜனாதிபதி செயலகம் எதிரில், காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

காலி மாவட்டத்தில், காலி மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோத்தாகோகம’ கிராமத்தின் முதலாவது கிளைக் கிராமத்தையும் காலியில் அமைத்திருந்தனர்.

அந்தப் பகுதியில் கிரிக்கெட் போட்டி இடம்பெறுவதால் ‘கோத்தாகோகம’ கிராமத்தை அகற்றுமாறு பொலிஸார் கோரியிருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் மறுத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றுக்காலை 6 மணியளவில்அங்கு திடுதிடுப்பென புகுந்த பொலிஸார், போராட்டக்காரர்களை இழுத்துப்பிடித்து வெளியே தள்ளிவிட்டு கூடாரத்தை அடித்து, உதைத்து அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டக்காரர்கள் மிகக்கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்துடன் காலி பிரதான பேருந்து நிலையத்தில் குழுமி நின்ற மக்களையும் ஆதரவுக்கு போராட்டக்காரர்கள் அழைத்தனர்.

சிறிது நேரத்திலேயே அங்கு அதிகளவான மக்கள் திரண்டனர். சட்டத்தரணிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொலிஸாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தமது நடவடிக்கைகளிலிருந்து பொலிஸார் பின்வாங்கிச் சென்றனர்.

பொலிஸார் சென்ற பின்னர் அதேயிடத்தில் முன்னர் இருந்ததை விட மிகப் பெரிய கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *