
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை
மே 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெகுணவெல இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஆளுநராக 2006 ஜூலை 01 முதல் 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் ஆளுநராக இருந்த போது, 2022 ஜனவரி 18ஆம் திகதி செலுத்த வேண்டிய முறிப் பத்திரங்கள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆளுநராக இருந்த காலத்தில், மத்திய வங்கிக்குள் பதவிகளுக்கு தனது நெருங்கிய உறவினர்களை நியமித்ததன் மூலம் இரகசியத் தகவல்களை வெளியிட்டதன் மூலம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் இலங்கை அரசாங்கம் 10.04 பில்லியன் ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தின் 4 முக்கிய உறுப்பினர்கள் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள சட்டத்தரணிகள் குழுவொன்று தயாராகி வருகின்றது.