நடுநிலைமை என்பது கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே –

மக்கள் பக்கமா? கள்ளர்கள் பக்கமா? என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் என்றும் நடுநிலைமை என்பதும் கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடு முழுவதும் நாளுக்கு நாள் தன்னெழுச்சி போராட்டம் வீரியம் பெற்று வருகின்றது.

மக்களின், ‘கோட்டா போ’ என்ற கோஷம் வலுப்பெறுகிறது. ‘ராஜபக்ஷக்களை விரட்டி அடிப்போம், கொள்ளையடித்த பணத்தை திரும்ப பெறுவோம்’ என்று பல மட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கிறது.

ஆனால், அரசாங்கம் தனது வழமையான அசமந்த போக்கையும் இழுத்தடிப்பையும் செய்து வருகின்றது. வீதிகளிலே மக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப போராடுகின்றபோது, அதற்கு மதிப்பளித்து, அரசியல் அமைப்பிற்கமைய நாடாளுமன்றத்தில் நாம் அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலையை செய்ய வேண்டி இருக்கின்றது. அதற்காக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

மக்கள் பக்கமா? கள்ளர்கள் பக்கமா? என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் ஆகும். இதில் நடுநிலைமை என கூறி தலைமறைவாக முடியாது. நடுநிலைமை என்பதும் கள்ளர்கூட்டத்தை ஆதரிப்பதே ஆகும்.

நாடாளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளனர். இதனை எதிர்ப்பது என்பது நாட்டை புறம்தள்ளி, மக்களை புறம்தள்ளி, இன்று வீதியில் இறங்கி போராடும் இளைஞர் யுவதிகளின் கருத்தை, கோஷத்தை ஏளனப்படுத்தி, தமது சொந்த நலனுக்காக செயற்படுவதாகும்” என அவர் மெலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *