போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை பிரயோகிக்கும் திட்டம் இல்லை

அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை பிரயோகிப்பதற்கு எவ்வித திட்டமும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்படும் அமைதிப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் எவ்விதத்திலும் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என பாதுகாப்பு செயலாளரை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

போராட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் நாட்டின் பாதுகாப்பிற்காக அரசியலமைப்பினை பாதுகாப்பதற்காகவும் அனைத்து இலங்கையர்கள் மத்தியிலும் அமைதி மற்றும் சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கும் பொலிஸார் உதவி கோரும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் இராணுத்தினரின் உதவி வழங்கப்படுவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதியாகப் போராடுபவர்கள் மத்தியில் புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி, ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்தி அல்லது குண்டுத் தாக்குதல் போன்றவற்றை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு திட்டமுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்படுவதாகவும் அவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும்      முப்படையினர் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அன்பு கொண்ட தார்மீக பொறுப்புள்ளவர்கள் எனவும்  பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டங்களின் போது, பொதுச் சொத்துக்கள் அல்லது தனியார் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *