
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2006ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அமைச்சரவை அல்லது நாணயச் சபையின் அனுமதியின்றி நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின், மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமே வெளிநாடு செல்ல தடை விதிக்க முடியும் என கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனவல மனுதாரர்கள் தரப்பின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் 2ஆம் திகதி வரை நீடித்த மேலதிக நீதிவான், அன்றைய தினம் அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளார்.