நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாண சபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம்.

தற்பொழுது நிலவும் நெருக்கடி நிலைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளைக் காண்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றி குழுவின் உறுப்பினர்கள் நேற்றையதினம் பாராளுமன்றத்தில் கூடினர்.

இதில் நீண்டகாலத் தீர்வாக புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கும், குறுகியகாலத் தீர்வாக 21வது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்து பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவது தொடர்பில் கட்சிகளின் தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இதற்கமைய 19வது அரசியலமைப்புத் திருத்தத்தில் காணப்படும் சில ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் மக்கள் எதிர்பார்க்கும் சில சாதகமான முன்மொழிவுகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்காய்வாளர் நாயகத்தின் மேற்பார்வைக்கு உட்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தைத் திருத்தல், கணக்காய்வாளர் நாயகத்துக்கு அரசியல் கட்சிகளைக் கணக்காய்வுக்கு உட்படுத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ளல், அரசாங்கத்தின் ஒப்பந்தங்களுக்கு கேள்விப்பத்திரங்கள் இன்றி பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதைத் தடுத்தல் மற்றும் அரசாங்க ஒப்பந்தங்களில் ஒழுங்குமுறையொன்றை உறுதிப்படுத்துவதற்கான திருத்தம், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அல்லது அரசாங்க ஊழியர்களினால் சட்டவிரோதமாகச் சம்பாதித்த வெளிநாட்டு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்டிருப்பதாக வெளியாகும் சொத்துக்கள் அரசுடமையாக்குவதற்கு ஏதுவான வகையில் சட்டங்களைத் திருத்தல், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு மற்றும் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்படுவதைத் தடுக்கும் திருத்தம் போன்ற பல்வேறு முன்மொழிவுகள் இதில் அடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *