ஆப்கானிஸ்தானில் பாடசாலைக்கு அருகாமையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்: 6பேர் உயிரிழப்பு- 11பேர் காயம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பாடசாலைக்கு வெளியே நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 11பேர் காயமடைந்தனர்.

நகரின் மேற்கில் ஷியாக்கள் ஆதிக்கம் செலுத்தும் அப்துல் ரஹீம் ஷாஹித் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகாமையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தது.

இந்த தாக்குதல்களில், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அருகில் இருந்த தனியார் பிரத்தியேக கல்வி நிலையம் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்களுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இப்பகுதியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கடந்த காலங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாடசாலை தாக்குதலில் இருந்து இதுவரை நான்கு இறந்தவர்களின் உடல்கள் மற்றும் 19 காயமடைந்தவர்கள் காபூலில் உள்ள முஹம்மது அலி ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்தபோது மாணவர்கள் காலை வகுப்புகளை விட்டு வெளியேறிக்கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *