செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை

கொழும்பு, ஏப் 19

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலையடுத்து, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்  காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது எனவும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

நாட்டு மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

மக்கள் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரம் பாரியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மக்களின் போராட்டம் நியாயமானது. மக்களை பாதுக்காக்க வேண்டிய பொலிஸார் இவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளமையானது அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது.

அரசாங்கம் போராட்டக்காரர்களை அடக்குவதற்கு கொடுக்கும் முக்கியத்துவம்  நாட்டில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமையை மீள்கட்டியெலுப்ப கொடுக்கவில்லை என்பது அவர்களின் தற்போதைய செயல்களில் அறியமுடிகிறது.

நாட்டுமக்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கான போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.தொ.கா  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இச்சம்பவத்தில் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.

மேலும் இவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *