நாடளாவிய ரீதியில் தினமும் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்றையதினம் ரம்புக்கனை பிரதேசத்தில் எரிபொருள் தாங்கிய பவுசருக்கு தீ வைக்க முற்பட்டனர் என தெரிவித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 24இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கையில் மாத்திரம் அல்லாது சர்வதேச ரீதியில் கடும் கண்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேவை ஏற்படின் எரிபொருள் புகையிரதங்களுக்கு இலங்கை விமானப்படை பாதுகாப்பு வழங்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிபொருள் பவுஸர்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக சமூக மற்றும் அரசியல் பரப்பில் பாரிய அதிர்வலைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையின் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. அதன்படி,
திருகோணமலை
திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்று புதன்கிழமை உக்கிரமடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.நேற்று மாலை இப்போராட்டம் ஆரம்பமானது.
இந்நிலையில் தற்போது திருகோணமலை நகருக்குச் செல்லும் அனைத்து வீதிகளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மரங்கள் போடப்பட்டு மறிக்கப்பட்டு , வீதிகளின் குருக்கே ரயர்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.
அதிகளவான பொதுமக்கள் வீதிகளில் நின்று எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
திருகோணமலை நகருக்கான போக்குவரத்து தடைபட்டுள்ளதோடு பிரயாணிகள் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதையும் காணமுடிகின்றது.



அட்டன் நகர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் அட்டன் நகரில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
அட்டன் நகரில் டெலிகோம் முன்பாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. பயணிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியிருந்தனர்.
டயர்களை வீதிகளில் எரித்து, தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அட்டன் நகரிலுள்ள பல வர்த்தகர்கள் கடைகளை மூடி தமது ஆதரவை வழங்கினர்.





கொட்டகலை
கொட்டகலை நகரில் இன்று மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் படுத்தும், ஒப்பாரி வைத்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கொட்டகலை நகர வாசிகள், சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினர்.
கொட்டகலை பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் சுதந்திரமாக செல்வதற்கு போராட்டக்காரர்கள் இடமளித்தமை விசேட அம்சமாகும்.


