
இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு நேரடியாக உதவுவதற்கு, அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றலுடன் ஓர் பொறிமுறையொன்றினை உருவாக்குமாறு தமிழக அரசினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஏப்ரல் 15ம் திகதியன்று கடிதமொன்றினை அனுப்பியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
“சிங்கள அரசாங்கங்கள் எவையும் தமிழ்மக்களை பாரபட்டசமின்றி நீதியாக நடத்தப் போவதில்லை. இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் நேரடி உதவிப்பொறிமுறை உருவாகும் நிலை தோன்றின் புலம்பெயர் தமிழ் மக்கள், தமிழக மக்கள், உலகத் தமிழ் மக்கள் இணைந்து ஈழத்தமிழ் மக்களை இன்றைய நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் மீதான சிங்கள அரசாங்கங்களின் இனவழிப்புப்போரும், பெரும் இராணுவச் செலவீனங்களும், தவறான கொள்கைளும், ஊழல் நிறைந்த நிர்வாகமும், கோவிட் உலகப்பெருந்தொற்று உருவாக்கிய தாக்கங்களும் இணைந்தே இப்பெரும் பொருளாதார நெருக்கடியினை உருவாக்கியுள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழர் தேசம் சிங்கள பேரினவாத அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்பொருாளார நெருக்கடி இனவழிப்புப்போரால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு இன்றைய நெருக்கடி இரட்டைச்சுமையாய் அமைந்துள்ளளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழ் மக்களுக்கான ஒரு நேரடி உதவிப்பொறிமுறையினை உருவாக்கும் முயற்சிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குமாறு கோரியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், இப்பொறிமுறையினை உருவாக்கும் முயிற்சியினைக் காலதாமதம் இன்றி ஆரம்பிப்பது ஈழத்தமிழ்மக்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தரும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஈழத்தமிழர் தேசத்தின் உண்மை நிலையையைக் கண்டறிவதற்கான குழு ஒன்றினை அங்கு உடன் அனுப்பி வைப்பதும் இம் முயற்சிக்கு வலுச் சேர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேரடி உதவிப் பொறிமுறை ஊடாக ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பங்களிப்பை வழங்கும்” எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.