
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை குறித்து இன்று பாராளுமன்றத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறி, தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் இன்றைய நாடாளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன,
குறித்த நியமனங்களை பின்னர் வழங்குவது பொருத்தமானதாகும் என முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் மத்திய மாகாண செயலாளருக்கு சுற்றுநிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்த சுற்று நிருபமே குறித்த நியமனங்களை வழங்குவதற்கு தடையாகவுள்ளது. மத்திய மாகாணம் மாத்திரம் இன்றி நாடளாவிய ரீதியில் புதிய நியமனங்கள் வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த நியமனங்கள் ஏனைய மாகாணங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அனுமதியை விரைவில் பெற்றுக்கொள்ளவும் கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றதும், அவர்களை விரைவில் சேவையில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் இந்த விடயம் மத்திய மாகாண சபையின் கீழ் உள்ளது.
இருப்பினும், குறித்த நியமனங்களை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் அழுத்தம் வழங்கும்.
நாட்டின் நிதி நிலையும் எதிர்காலத்தில் சீரடையும் என நம்பிக்கையுள்ள நிலையில், மலையக மக்களின் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டை கருத்திற்கொண்டு மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களின் நியமனங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.